சிரம்பான், ஜூலை.16-
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் இடையே கூட்டணி அமைந்தாலும், அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜசெக பொதுச் செயலாளரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த ஜோகூர் மாநிலத் தேர்தல் மற்றும் முந்தைய அரசியல் அனுபவங்களின் அடிப்படையில், எதிரணிகள் வகுக்கும் எந்த ஓர் அரசியல் வியூகமும் பக்காத்தான் ஹராப்பானை எந்த வகையிலும் பாதிக்காது என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக, தேர்தல் இயந்திரத்தை மேலும் வலுப்படுத்துவதிலும், கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமையை உறுதிப்படுத்துவதிலும் பக்காத்தான் ஹராப்பான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Kampung Mantin Dalam பகுதியில் இன்று நடைபெற்ற 2026 Kampung Angkat Madani, Sekolah Angkat Madani மற்றும் Santuni Madani நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி லோக், பாரிசான் – பெரிக்காத்தான் கூட்டணி வியூகத்தை தாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்ததாகவும், என்றாலும், பக்காத்தான் ஹராப்பான் தாம் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெற, சொந்த பலத்தையே நம்பி செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2018 -ஆம் ஆண்டு முதல் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூன் தலைமையிலான நெகிரி செம்பிலான் மாநில அரசின் செயல்பாடுகளே, மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து பெறுவதற்கான பக்காத்தான் ஹராப்பானின் மிகப் பெரிய பலமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








