கோலாலம்பூர், ஜூலை.16-
மலாக்கா மாநில அரசிலிருந்து வெளியேறும் ஜசெக கட்சியின் முடிவு இறுதியானது என்றும், அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
மலாக்கா சட்டமன்றத்தில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை அனுமதிக்கும் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநில ஜசெக உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்து அரசிலிருந்து வெளியேறினர். இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலையிட்டு, முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், பிரதமரை நேரில் சந்தித்து கட்சியின் இந்த உறுதியான நிலைப்பாட்டை விளக்கி விட்டதாக அந்தோணி லோக் செய்தியாளர்களிடம் கூறினார். ஜனநாயகக் கொள்கைகளின்படி அரசாங்கத்தின் முடிவை எதிர்க்கும் போது, பதவிகளை ராஜினாமா செய்வதே முறையானது என்றும், மாநில ஜசெகவின் இந்த கொள்கை ரீதியான முடிவை கட்சியின் மத்திய செயற்குழு முழுமையாக மதிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.








