கோலாலம்பூர், ஜூலை.16-
நான்கு முறை தாம் வெற்றி பெற்ற சிக்காமட் தொகுதியிலிருந்து விலகியது தோல்வி அச்சத்தால் அல்ல என்றும், லிங்கி தொகுதியை பக்காத்தான் ஹராப்பானுக்குப் பெற்றுத் தரும் நோக்கில் வகுக்கப்பட்ட தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதி என்றும் நெகிரி செம்பிலான் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூன் தெரிவித்துள்ளார்.
அம்மாநில இடைக்கால மந்திரி பெசாருமான அவர், சிக்காமட் தொகுதியைத் தனது அரசியல் செயலாளர் Ustaz Nor Azman Mohamad-இடம் ஒப்படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிக்காமட் தொகுதி மீது தமக்கு மிகுந்த பாசம் உள்ளதாகவும், அங்குள்ள மக்களுக்கு என்றுமே நன்றிக் கடன்பட்டிருப்பதாகவும் அமினுடின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், லிங்கி மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்திலேயே தமது விருப்பப்படி அங்கு போட்டியிடச் செல்வதாகவும் அமினுடின் விவரித்துள்ளார்.
இதனிடையே, லிங்கி தொகுதி நீண்டகாலமாக Barisan Nasional -இன் கோட்டையாக இருந்து வருவதால் அது எளிதான தொகுதி அல்ல என்பதையும் அமினுடின் ஒப்புக் கொண்டுள்ளார்.
இருப்பினும், பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெறும் வகையில் இந்தத் தொகுதியை மாற்றும் முடிவு மிக கவனமாக எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2008-ஆம் ஆண்டு முதல் சிக்காமட் தொகுதியில் வெற்றி பெற்று வந்த நிலையில், அந்தத் தொகுதி தனது அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத பல நினைவுகளை தாங்கி நிற்பதாகவும் அமினுடின் ஹரூன் விவரித்துள்ளார்.








