நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசியல் எதிர்காலத்தை எழுதப்போகும் 16-ஆவது மாநிலப் பொதுத்தேர்தலுக்கான இரண்டு வார கால அனல் பறக்கும் பிரச்சாரக் களம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
ஒட்டுமொத்த மலேசியாவின் பார்வையும் நெகிரி செம்பிலான் நோக்கித் திரும்பியுள்ள நிலையில், நாளை சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது 36 சட்டமன்றத் தொகுதிகளின் அரியணையைக் கைப்பற்ற சுயேச்சைகள் உட்பட 103 வேட்பாளர்கள் இறுதிப் போர்க்களத்தில் மோதுகின்றனர்.
ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 36 தொகுதிகளிலும், பாரிசான் நேஷனல் 25 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. பக்காத்தான் ஹராப்பானுக்குத் தலைமையேற்று அதன் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாகக் களத்தில் இறங்கிப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளைச் செய்துள்ளார்.
அதேபோல், பாரிசான் நேஷனல் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியும் தேர்தல் களத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஆதரவு திரட்டினார். இவர்களுக்கு எதிராகப் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் பாஸ் 11 இடங்களிலும், பெர்சத்து 24 இடங்களிலும், இறங்கிப் பலப்பரீட்சை நடத்துகின்றன
மாநிலத்தின் 8 லட்சத்து 67 ஆயிரத்து 151 வாக்காளர்களின் பாதுகாப்பிற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் தீவிரக் களப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வாழ்வாதாரச் செலவின உயர்வு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகளே இந்தத் தேர்தலின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகின்றன. நாட்டின் தலையாய கடமையை ஆற்ற, வெளிவட்டார வாக்காளர்கள் அனைவரும் உடனடியாகத் தாயகம் திரும்ப வேண்டுமென அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தங்களின் இறுதிக்கட்ட அவசர முழக்கத்தை விடுத்துள்ளனர்.
முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட போலீஸ் மற்றும் இராணுவ வாக்குகள் மாலை 5:00 மணிக்கே எண்ணப்பட உள்ள நிலையில், மத்தியில் ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாரிசான் நேஷனல், தனது பரம வைரியான பாஸ் கட்சியுடன் ரகசியக் கைகோர்த்து நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்கட்டிலைக் கைப்பற்றப் போடும் இந்த விபரீத வியூகத்தை, பக்காத்தான் ஹராப்பான் தன் முழு பலம்கொண்டு முறியடிக்குமா? அல்லது நெகிரி செம்பிலான் கோட்டை சரிந்து வீழுமா? என்பதே ஒட்டுமொத்த மலேசியாவின் தற்போதைய மிரளவைக்கும் எதிர்பார்ப்பாகும்.








