பெட்டாலிங் ஜெயா, ஜூன் 18-
பெர்சத்து கட்சி, கடந்த 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, அதன் தலைவராக இருந்துவரும் டான் ஸ்ரீ முகைதீன் யாசின், அப்பொறுப்பிலிருந்து விலகும் முடிவை எப்போதோ எடுத்துவிட்டார்.
ஆனால், அக்கட்சியினுள் நீடித்துவரும் உட்கட்சி பூசல்களினால், அவரால் அப்பொறுப்பிலிருந்து விலக முடியாமல் போய்விட்டது.
அதன் காரணமாகவே, முகைதீன் -ன்னை தலைவராக நிலைநிறுத்தும் முடிவு இம்மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் உச்சமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக, பெயர் கூற விரும்பாத தலைவர் ஒருவர் கூறினார்.
இவ்வாண்டு அக்டோபரில் பெர்சத்து-வின் கட்சி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், உட்கட்சி பூசல்கள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நடப்பில், துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் பைசால் அசுமு, பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுதீன், உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ஆகிய தலைவர்களால் பெர்சத்து 3 3 பிரிவுகளாக பிளவுப்பட்டுள்ளது.
நடப்பில்,பெரிக்காதான் நசியனால் கூட்டணி பெரும்பான்மை மலாய் வாக்காளர்களின் ஆதரவைக் கொண்டுள்ள சூழலில், பெர்சத்து-வில் ஏற்பட்ட பிளவுகள், நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், அக்கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஐயுறப்படுகின்றது.
அதனைத் தவிர்க்கவே, முகைதீன் , பெர்சத்து-வின் தலைவர் பொறுப்பை தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.








