பெட்டாலிங் ஜெயா, ஜூன் 12-
கட்சிக்கு விசுவாசத்தை தெரிவிக்க தவறிய தங்களது 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கட்சியில் உறுப்பியத்தை இழந்துவிட்டது தொடர்பான நோட்டிஸ், இன்னும் ஓரிரு நாள்களில் அவர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும் என பெர்சத்து தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.
அந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை குறித்து மக்களவை தலைவரிடமும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் குறித்து சிலாங்கூர் சட்டமன்ற தலைவரிடமும் தெரிவிக்கப்படும்.
நுட்ப ரீதியிலான விவகாரத்தை அது உள்ளடக்கியிருப்பதால், வழக்கறிஞருடன் விவாதிக்க வேண்டிய சூழல் காரணமாக, நோட்டிஸை தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசியலைமைப்பு, கட்சித் தாவல் தடுப்பு சட்டம் ஆகியவற்றிற்கு ஏற்ப,தமது தரப்பு கவனத்துடனும் முறையுடனும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதை, முகைதீன் யாசின் சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் சிலாங்கூரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர், மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி-க்கும் ஆதரவை வழங்கியிருந்தனர்.








