சுங்கை பக்காப், ஜூன் 04-
வரவிருக்கும் பினாங்கு, சுங்கை பக்காப் சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில், அம்னோ-வைவிட PKR கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக, இல்ஹாம் மையம் ஆய்வு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹிசோம்முடின் பாக்கர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அம்னோ-வுக்கு வழங்கப்பட வேண்டுமென அதன் கடைநிலை உறுப்பினர்கள் கோரிக்கையை முன்வைத்துவருவதை சுட்டிக்காட்டி, அவர் அக்கூற்றை முன்வைத்துள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற பினாங்கு சட்டமன்ற தேர்தலில், சுங்கை பக்காப் தொகுதியை PAS கட்சி வெல்வதற்கு முன்பு, அந்த தொகுதி 3 தவணைகள் PKR கட்சியின் வசமிருந்தது.
60 விழுக்காடு மலாய் வாக்காளர்களைக் கொண்டுள்ள அக்கட்சி, கலப்பு தொகுதியாக விளங்குகின்றது. அம்னோ அங்கு போட்டியிட்டால், அச்சமூகத்தினரின் வாக்குகள் மட்டுமே கிடைக்கும்.
ஆனால், PKR கட்சி போட்டியிட்டால், மலாய்க்காரர்கள் மட்டுமின்றி, இந்தியர்கள், சீனர்களின் வாக்குகளைப் பெற முடியும்.
அதனை நன்கு உணர்ந்துள்ள பினாங்கு அம்னோ, அத்தொகுதியில் PKR கட்சி போட்டியிடுவதற்கு வழிவிட்டுள்ளதோடு, மாநில ஒற்றுமை அரசாங்கத்தில் ஏற்படவிருந்த பிளவையும் நல்லமுறையில் தவிர்த்திருப்பதாக, ஹிசோம்முடின் பாக்கர் குறிப்பிட்டார்.








