கிள்ளான், நவ. 25-
சிலாங்கூர் மாநிலத்தில் பக்கத்தான் அரசாங்கம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை 200 முதல் 300 ஆலயங்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பக்தர்கள் அச்சமும் அவநம்பிக்கையும் இன்றி தங்களின் வழிபாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில் மாநில அரசு இத்தகைய முயற்சிகளை முன்னெடுத்து செயல்படுத்தி வருவதாக
அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக லீமாஸ் எனப்படும் ஐந்து சமயங்களை உள்ளடக்கிய சிறப்பு செயல்குழுவை மாநில அரசு அமைத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
வழிபாட்டுத் தலங்கள் எதிர்நோக்கும் நிலப்பிரச்சினையை தீர்ப்பதோடு மட்டுமல்லாது அவற்றை நிர்வாகம் செய்வதில் உதவும் நோக்கிலும்
லீமாஸ் வாயிலாக மானியமும் சிலாங்கூர் அரசு வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கிள்ளான், தாமான் செந்தோசாவில் நடைபெற்ற செந்தோசா சட்டமன்றத் தொகுதி நிலையிலான தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமிருடின் இவ்வாறு குறிப்பிட்டார்.








