முன்னாள் உறுப்பினர்கள் அம்னோவுக்குத் திரும்புமாறு அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி விடுத்துள்ள அழைப்பை ஏற்று, தான் மீண்டும் அம்னோவில் இணையப் போவதாக முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருமான கைரி, தான் எப்போதுமே அம்னோவுக்குத் திரும்ப ஆர்வம் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அம்னோவின் இந்த ஆக்கப்பூர்வ முன்னெடுப்பு, புதிய நம்பிக்கையை அளிப்பதாகவும், இப்போதே அம்னோவில் இணைவதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை தயாரித்து வருவதாகவும் கைரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 15-வது பொதுத்தேர்தலில், கட்சியின் ஒழுங்குவிதிகளை மீறிய குற்றச்சாட்டில், கைரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








