நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரசாரங்களில், தமக்கு எதிராக திட்டமிட்ட அவதூறு பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று சிம்பாங் துரியான் பகுதியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட தேநீர் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அந்தோணி லோக், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றால் தாம் மந்திரி பெசார்-ஆக நியமிக்கப்படுவதாகவும், அதனால் மலாய்க்காரர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்துவிடுவார்கள் என்றும் மலாய் வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பக்காத்தான் ஹராப்பான் சார்பில் சென்னா தொகுதியில் போட்டியிடும் அவர், தான் ஆடத் அமைப்பில் தலையிடுவதாகவும், அரச குடும்பத்தின் மரியாதையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் மற்றொரு குற்றச்சாட்டுகளும் தம் மீது சுமத்தப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேவேளையில், மாநில அரசியலமைப்பின்படி 'மந்திரி பெசார்' பதவியை மலாய் இனத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே வகிக்க வேண்டும் என்பதால், அப்பதவியை வகிக்கத் தான் தகுதியற்றவர் என்றும் அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.








