கோலாலம்பூர், நவம்பர்.16-
சபா மாநிலத்தின் 40 விழுக்காடு வருவாய்க் கோரிக்கைக்காக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய உப்கோ தலைவர் எவோன் பெனடிக் "ஒரு ஹீரோ இல்லை, அவர் வெறும் பொம்மை" என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நடந்த முக்கிய அமைச்சரவைக் கூட்டத்திற்கு எவோன் வராமல் தவிர்த்து விட்டதாகவும், பதவி விலகல் கடிதம் கொடுத்திருந்தாலும், எதிர்வரும் டிசம்பர் மாதமே அப்பதவி விலகல் நடப்புக்கு வர உள்ளது. எனவே, இன்னமும் அவர் அமைச்சராகவே இருந்ததால், அவர் அந்த சிறப்பு கூட்ட த்தில் கலந்து கொண்டு தனது கோரிக்கையை முன்வைக்கத் தவறிவிட்டார் என்றும் லோக் குற்றம் சாட்டினார்.
"பிரதமரையும், சட்டத்துறைத் தலைவரையும் எதிர்த்துப் போராடி விட்டுப் பின்னர் பதவி விலகி இருந்தால் உங்களை நான் 'ஹீரோ' என்று ஏற்றிருப்பேன்; இப்போது நீங்கள் வெறும் 'நாடகம்' மட்டுமே ஆடுகிறீர்கள்" என்று லோக் நேரடியாக எவோனுக்குச் சவால் விடுத்தார். மேலும், சபா மக்கள் உணர்ச்சிகரமான மோதல் அரசியலில் கவனம் செலுத்தாமல், மாநிலத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறுதியான ஒத்துழைப்பே அவசியம் என்றும் லோக் வலியுறுத்தியுள்ளார்.








