போர்ட் டிக்சன் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்றத் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பரம ஏழ்மை நிலை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, சுழியம் விழுக்காட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று அத்தொகுதியின் பிகேஆர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஜி. ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.


இத்தொகுதியில் இரண்டாவது தவணையாகப் போட்டியிடும் டாக்டர் ராஜசேகரன், தொகுதி அடைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சியைத் தங்களின் ஆற்றல்மிக்க சேவைக்கான ஆகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுவதாகத் தனது சாதனைகளை விவரித்தார்.

ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் கடந்த 15 ஆண்டு காலமாக ஒரு மருத்துவராகப் பணியாற்றியதன் மூலம் தொகுதி மக்களுடன் தனக்கு நெருங்கிய அறிமுகம் இருப்பதாக டாக்டர் ராஜசேகரன் குறிப்பிட்டார். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை அடிமட்டம் வரை நேரடியாக அறிந்து அதற்கு ஏற்றவாறு சேவையாற்றியதால் தான், கடந்த முறை மூவாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தம்மால் அமோக வெற்றி பெற முடிந்தது என்று அவர் நினைவு கூர்ந்தார்.

"தொகுதி அடையப்பெற்ற வளர்ச்சியை நாங்கள் வெறுமனே வாயளவில் பேசவில்லை, அதற்கான அனைத்துத் தரவுகளும் எங்களிடம் முறையாக உண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொகுதியில் நிலவி வந்த பல நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. குறிப்பாக, உள்ளூர் இந்திய சமூகத்தினரின் மின்சுடலை முறையான தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோன்று, நமது போர்ட் டிக்சன் பகுதி நாட்டின் மிக அமைதியான மற்றும் மகிழ்ச்சியான நகரமாக அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது நமது ஒட்டுமொத்த தொகுதிக்கும் கிடைத்த பெரும் கௌரவமாகும்" என்று டாக்டர் ராஜசேகரன் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார்.










