நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ உத்தாமா அமினுடின் ஹாருன் முன்னிலையில், நடைபெறவுள்ள 16ஆவது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பக்காத்தான் அரப்பான் கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. "கெகல் அரப்பான் – நெகிரி செம்பிலான் மஜு 2045" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மாநிலத்தில் பெறப்பட்ட வெற்றிகளைத் தொடர்வதையும், எதிர்கால வளர்ச்சிக்கான பாதையை நிர்ணயிப்பதையும் இந்த அறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் இதன் முக்கிய அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் முக்கிய இலக்குகளாக 30,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் மற்றும் 20,000 மலிவு விலை வீடுகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மக்களின் பிறப்பு முதல் முதுமை வரை பல்வேறு உதவிகளை வழங்கும் மேம்படுத்தப்பட்ட 'ஸ்கிம் செஜாத்திரா ராக்யாட்' திட்டமும் இதில் இடம்பெற்றுள்ளது.








