நவ. 23-
தமது தலைமையிலான மடானி அரசாங்கம், தேசிய வளர்ச்சியில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.
அதேவேளையில் அற்பத்தனமாக வெளியிடப்படும் உதவாக்கரை அறிக்கைகளுக்கு பதில் அளிக்காது, உபசரிக்காது. கவனத்தை சிதற விடாது என்று பிரதமர் திட்டவட்டாக தெரிவித்துள்ளார்.
மடானி அரசாங்கத்தின் வெற்றிகரமான இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்ட நிகழ்வு கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் இரண்டாவது நாளாக இன்று சனிக்கிழமை நடைபெற்று வரும் வேளையில் இந்த நிறைவு விழா கொண்டாட்டத்திற்கு தலைமையேற்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளார்.
நாட்டின் தேசிய அபிவிருத்தி திட்டங்கள், பொருளாதாரத்தை வலுப்படுத்ததல் மற்றும் மக்களின் வாழ்வை உறுதி செய்தல் ஆகியவை மடானி அரசாங்கத்தின் பிரதான முன்னெடுப்பாாக இருக்குமே தவிர அற்ப அறிக்கைகளை கண்டு, சோர்ந்து விடாது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
பிரதமர் பதவி வகிப்பதால் நாம் அங்கீகரிப்படுவது அல்ல. நாட்டின் அமைதி, வளர்ச்சி, மற்றும் நாடியிலும் நரம்பிலும் இரண்டறக் கலந்த நிலையில், ஒரே குரலாக, ஒரே குழுவாக செயல்படுவதால் உலக அரங்கில் நாம் இன்று அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறோம் என்று பிரதமர் பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் குறிப்பிட்டார்.
இதனிடைய நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதிலும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் கடுமையான விமர்சனங்களை அள்ளித்தெளித்து வரும் தரப்பினரையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தமது உரையில் கடுமையாக விமர்சனம் செய்தார்.
முன்னதாக, மடானி அரசாங்கத்தின் இந்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்ட நிகழ்வில் துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் ஆகியோருடன் இணைந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் முன்னிலையில் , மலேசிய பொதுச் சேவை துறையுடனான உறுதிமொழிக்குரிய கோலாலம்பூர் பிரகடனம் நிகழ்வு நடைபெற்றது.








