வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஜோகூரைச் சேர்ந்த கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனம் ஒன்றின் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ ஆர். ரமணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாசிர் கூடாங்-ஐத் தளமாகக் கொண்ட எஸ்டார் விஷன் எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 80 வெளிநாட்டுத் தொழிலாளர்கள், கடந்த ஆறு மாதங்களாகத் தங்களுக்கு ஊதியமும், மிகைநேரப் பணி கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என்று புகார் அளித்ததையடுத்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
104 வங்காள தேசத் தொழிலாளர்கள் மற்றும் 65 மலேசியர்கள் உட்பட மொத்தம் 169 தொழிலாளர்களைப் பணியமர்த்தியுள்ள 'எஸ்டார் விஷன்' நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஊதியப் பட்டுவாடாவைத் தாமதப்படுத்தி வருவதாகவும், அந்த மாதத்திற்கான சில ஊதியங்கள் தவணைகளாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் துறை கண்டறிந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
1955-ஆம் ஆண்டு வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ், ஊதியம் வழங்கப்படாதது தொடர்பாக, இதுவரை 16 விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் எட்டு விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும், தொழிலாளர் சட்டங்கள் மீறப்பட்டால், அதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளப்படாது என்றும் அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.








