கோலாலம்பூர், அக்டோபர்.11-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், ஒரு நியாயமான, சமநிலையான மற்றும் முற்போக்கான திட்டத்தைத் தாங்கியதாகும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் வர்ணித்துள்ளார்.
ஒரு வலுவான நிர்வாகத்தையும் மக்கள் மீதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் 2026 ஆம் ஆண்டு பட்ஜெட் பிரதிபலிக்கிறது என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.
நேற்று 2026 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஜசெக. உதவித் தலைவரான ங்கா கோர் மிங் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த பட்ஜெட் மூன்று முக்கிய அம்சங்களைத் தாங்கியுள்ளது. நாட்டின் தேசிய வருவாயை அதிகரித்தல், நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல் மற்றும் அரசாங்கத்தின் புதிய கடனைக் குறைத்தல் ஆகியவையே இந்த மூன்று அடிப்படைகளாகும் என்று விவரித்தார் ங்கா கோர் மிங்.
பிரதமரின் தலைமையில், மலேசியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்பதுடன் நாட்டின் தேசிய வளர்ச்சியானது, மக்களுக்குப் பயனளிப்பதை உறுதி செய்யும். தவிர மலேசியாவை உயர் வருமானம் கொண்ட ஒரு நாடாக முன்னோக்கிச் செல்லும் வகையில் நாடு வழிநடத்தப்படும் என்று ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
தவிர, அரசாங்கத்தின் ரொக்க நிதி உதவி முயற்சிகளையும், ங்கா கோர் மிங் வெகுவாகப் பாராட்டினார். அவை வரலாற்று சிறப்புமிக்க நிதி உதவித் திட்டம் என்று வர்ணித்த ங்கா கோர் மிங், இந்த ரொக்க உதவித் திட்டத்தின் கீழ் 15 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாகவும், சாரா 2026 திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் தனிநபர்கள் 600 ரிங்கிட் நிதி உதவியைப் பெறும் அதே வேளையில் குடும்பங்கள், தலா 4,600 ரிங்கிட்டைப் பெறுவார்கள். இதற்கு மேலாக, அடுத்த ஆண்டு ஹரி ராயா மற்றும் சீனப் புத்தாண்டின் போது ஒவ்வொரு பெறுநரும் 100 ரிங்கிட்டைக் கூடுதலாகப் பெறுவார்கள் என்று ங்கா கோர் மிங் தெரிவித்தார்.