சிரம்பான், ஆகஸ்ட்.01-
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனது 75-ஆவது வயதில் குடியுரிமையான MyKad பெற்ற 88 வயது மூதாட்டி எம். கிருஷ்ணம்மா, போக்குவரத்துச் சிரமங்களையும் பொருட்படுத்தாமல் டாக்சி பிடித்துத் தனியாக வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலையொட்டி, Sheikh Haji Mohd Said இடைநிலைப்பள்ளி வாக்களிப்பு மையத்திற்கு கிருஷ்ணம்மா வந்திருந்தார். பிள்ளைகள் வேறோர் இடத்தில் வசிக்க, வாகன வசதி ஏதுமின்றி தனியாக வாழும் அவர், நாட்டின் கடமையை நிறைவேற்றுவதில் எந்தச் சாக்கும் சொல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
முன்பு சிவப்பு அடையாள அட்டை வைத்திருந்த அவர், பல வருடக் காத்திருப்புக்குப் பின் 75 வயதில் மலேசியக் குடியுரிமை பெற்றார். இது அவர் வாக்களிக்கும் இரண்டாவது முறையாகும். மலேசியராக இருப்பதில் பெருமிதம் கொள்வதாகவும், சிரமங்களைக் கடந்து வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.








