பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்ட ஊழல் வழக்கில், முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்றைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பித்துள்ளது.
தொழிலதிபர் ஒருவரிடமிருந்து லிம் குவான் எங் 3.3 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலுள்ள உள்ளடக்கங்களை மாற்ற விரும்புவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வான் ஷாருடின் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தத் திருத்தம் பிரதிவாதியின் தற்காப்பு வாதத்தைப் பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்த விண்ணப்பத்திற்கு லிம் குவான் எங்கின் வழக்கறிஞர் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாட்சிகள் ஏற்கனவே வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், இத்திருத்தம் வழக்கின் போக்கை மாற்றக்கூடும் என அவர்கள் வாதிட்டனர். இது குறித்த ஆட்சேபனைகளை நீதிமன்றம் நாளை செவிமடுக்கவுள்ளது.
இதற்கிடையில், இன்றைய குறுக்கு விசாரணையின் போது, தொழிலதிபர் ஞானராஜாவுக்கும் சாரூல் அகமது சுல்கிப்ளிக்கும் இடையிலான குறுஞ்செய்திகளில் லிம் குவான் எங்கின் பெயர் இடம்பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. லிம் குவான் எங் மீது பழி சுமத்துவதற்காக அரசுத் தரப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டு சாட்சியாக மாறியுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும் ஞானராஜா மறுத்தார்.








