வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், ஆட்சியை வலுவாகவும் நிலையானதாகவும் அமைக்க குறைந்தது 36 தொகுதிகளில் 23 தொகுதிகளை வெல்வதே பக்காத்தானின் இலக்கு என்று அக்கூட்டணியின் துணைத் தலைவரும், ஜசெக பொதுச்செயலாளருமான அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
தற்போது பக்காத்தான் ஹராப்பானிடம் 17 தொகுதிகள் உள்ள நிலையில், எளிய பெரும்பான்மைக்கு குறைந்தது 19 தொகுதிகள் தேவைப்படும் என்றாலும், நிலையான ஆட்சிக்காக 23 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி வாரியாக மக்கள்தொகை மற்றும் வாக்காளர் நிலவரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 23 தொகுதிகளை வெல்வது எட்டக்கூடிய இலக்காக இருப்பதாக அந்தோணி லோக், நேற்று பக்காத்தான் ஹராப்பான் சார்பில் நடைபெற்ற இரவு விருந்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், நெகிரி செம்பிலான் இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் தலைமையில் மீண்டும் ஆட்சியை அமைக்க புதிய மக்கள் ஆணையை பக்காத்தான் ஹராப்பான் நாடுவதாகவும் அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், அமினுடின் ஹரூன் நேர்மையானவர், பணிவானவர், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதவர், ஊழலில் ஈடுபடாததால் என்பதால், அவரே மீண்டும் மந்திரி பெசாராகத் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மலாய், சீனர், இந்தியர் என அனைத்து இன மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பக்காத்தான் கூட்டணி, எந்த ஒரு பாகுபாடும் இன்றி நெகிரி செம்பிலான் மாநில மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றும் என்று அந்தோணி லோக் உறுதியளித்துள்ளார்.
என்றாலும், நிலையான அரசாங்கம் அமைந்தால் மட்டுமே, வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியும் என்றும், குறிப்பாக சிரம்பான் – கோலாலம்பூர் இடையேயான இணைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








