எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று, மாநிலச் சட்டமன்றத்திற்குத் தேர்வாகும் முதல் ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்க வேண்டும் என்ற இலக்குடன் இல்லத்தரசியான டயானா டால் களமிறங்கியுள்ளார்.
ஒராங் அஸ்லி மலேசியா கட்சியின் சார்பில் ஜெராம் படாங் தொகுதியில் போட்டியிடும் டயானா, இன, மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
ஜெராம் படாங் பகுதியைச் சேர்ந்தவரான அவர், இல்லத்தரசியாக இருப்பதும், சிறிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதும், மக்களின் பிரச்சினைகளை மாநிலச் சட்டமன்றத்தில் எடுத்துரைப்பதில் தமக்கு தடையாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் தமது தொகுதியில் எந்தவித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சமமாகச் சேவை செய்யவுள்ளதாகவும் டயானா டால் தெரிவித்துள்ளார்.








