ஷா ஆலாம், நவ. 15-
சிலாங்கூர் மாநிலத்தில் உயர்க்கல்விக்கூடங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் வெள்ளி ஊக்குவிப்பு நிதியை, அடுத்த ஆண்டும் தொடர்வதற்கும் சிலாங்கூர் அரசு முடிவு செய்துள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டிலும் தொடரப்படும் என்று மந்திரி பெசார் தெரிவித்தார். இத்திட்டத்திற்காக வரும் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 30 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்..
இந்த திட்டத்தின் கீழ் அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக் கூடங்களில் பயிலும் சிலாங்கூரை சேர்ந்த மாணவர்கள் பயன் பெற முடியும் என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அமிருடின் ஷாரி இதனை குறிப்பிட்டார்.
ஆயிரம் வெள்ளி வெகுமதி திட்டத்தில் பங்கேற்பதற்கும் உயர் கல்வி மாணவர்களின் குடும்ப வருமானம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
கடந்த 2023ஆம் ஆண்டு இந்த திட்டத்திற்கு 6,023 மாணவர்கள் விண்ணப்பம் செய்த வேளையில் அவர்களில் 3,000 பேர் வெகுமதியைப் பெறுவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றனர் என்பதையும் மந்திரி பெசார் சுட்டிக்காட்டினார்.
2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 300 கோடி வெள்ளிக்கான வரவு செலவுத்திட்டத்தை அமிருடின் ஷாரி அறிவித்தார்.
இதில் 170 கோடி வெள்ளி அல்லது 56.7 விழுக்காடு செயலாக்க செலவினத்திற்கும், 130 கோடி வெள்ளி அல்லது 43.3 விழுக்காடு மாநில மேம்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் விளக்கினார்.
சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு மா சம்பளம் போனஸ் தொகை, சிலாங்கூர் மக்களுக்கு மரண சகாய நிதியாக ஆயிரம் வெள்ளி உதவித் தொகை, ஏழைகளுக்கு உதவ மேலும் 56 ஏஹ்சான் மார்ட் கடைகள், மலாய், சீனம், தமிழ்ப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவற்கு 2 கோடியே 65 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு உள்ளிட்டு பல்வேறு சலுகைகளை மந்திரி பெசார் அமிருடின் ஷாரி 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தார்.








