தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் ஃபஹ்மி ஜைனோல் அப்பொறுப்பிலிருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார்.
பினாங்கு மாநில விவசாயத் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினரான பாந்தாய் ஜெரெஜாக் சட்டமன்ற உறுப்பினர் ஃபஹ்மி ஜைனோல், மாநில பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்
ஃபஹ்மியின் ஆட்சிக்குழு உறுப்பினர் பணி இன்று புதன்கிழமை நிறைவடைகிறது என்று முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் தெரிவித்தார்.
இன்று காலையில் ஃபஹ்மியை தாம் சந்தித்ததாகவும், தாங்கள் எடுத்துள்ள இந்த முடிவை அவர் ஏற்றுக்கொண்டதாகவும், ஃபஹ்மிக்கு பதிலாக புதிய ஒருவரை நியமிப்பதற்கான பரிந்துரையை இன்று மாலையில் மாநில ஆளுநரிடம் தாம் முன்வைக்கப் போவதாகவும் கோம்தாரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சாவ் கோன் இயாவ் இதனை தெரிவித்தார். .
தனது மனைவியை அடித்து காயப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதை அடுத்து, ஃபஹ்மி ஜைனோல் கட்சியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவதாக பி.கே.ஆர் பொதுச் செயலாளர் புசியா சாலே கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.








