தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தேர்தல் வெற்றியும், பிரதமராக அவர் நியமிக்கப்பட்டதும் செல்லாது என அறிவிக்க கோரி வழக்கறிஞர் பி. வேதமூர்த்தி தாக்கல் செய்த மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
வேதமூர்த்தியின் வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிய அன்வாரின் மனுவை, நீதிபதி ஆலிஸ் லோக் இன்று காலை ஏற்றுக்கொண்டார்.
மேலும், வழக்குச் செலவாக 80,000 ரிங்கிட் தொகையை அன்வார் இப்ராஹிமுக்கு வழங்க, வேதமூர்த்திக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், அன்வார், தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், பிரதமராக நியமிக்கப்பட்டதும் செல்லாது என்றும் அறிவிக்க கோரி, வேதமூர்த்தி கடந்த ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், கடந்த 2018 ஆம் ஆண்டு அன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பில், மலேசியாவின் கூட்டரசு அரசியலமைப்பின் படி விதிக்கப்பட்ட 5 ஆண்டுகளுக்கான தேர்தல் போட்டித் தடை நீக்கப்பட்டது பற்றி தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்று வாதிட்டார்.
அதன் அடிப்படையில், கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி, அன்வார், தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அதற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதும் செல்லாது என அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், வேதமூர்த்தியின் மனுவில் எந்தவொரு நியாயமான காரணமும் வெளிப்படையாக முன்வைக்கப்படவில்லை என்றும், சட்ட அடிப்படை எதுவும் இல்லாததால் இது தேவையில்லாத வழக்கு என்று கூறி நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.








