ஷா ஆலாம், ஆகஸ்ட்.03-
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை இழந்துள்ளாரா? என்பது குறித்து, இவ்வாரத்திற்குள் தெளிவான அறிவிப்புகள் வெளியாகும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவை மாநில சட்டமன்ற சபாநாயகர் Lau Weng San எடுப்பார் என்றும், அதன் பின்னரே தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசாங்க ஊழியர்கள் கூட்டம் மற்றும் 2026-ஆம் ஆண்டிற்கான 'Jalur Gemilang' தேசியக் கொடி பறக்கவிடும் மாநில அளவிலான பிரச்சார தொடக்க விழாவில் பேசிய அமிருடின் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டதால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாகத் தொடரும் தகுதியை அவர் இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், அந்த உறுப்பினரின் பெயரையோ அல்லது திவால் உத்தரவையோ எந்த அதிகாரப்பூர்வ அமைப்பும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
மேலும், சம்பந்தப்பட்ட தொகுதியில் சட்டப்படி மூன்று ஆண்டுகள் கடந்துள்ளதா? அல்லது இடைத்தேர்தல் அவசியமா? என்பதை தேர்தல் ஆணையமே தீர்மானிக்கும் என்றும் அமிருடின் ஷாரி விளக்கமளித்துள்ளார்.








