குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக அமைக்கப்படவுள்ள சிறப்பு நடுவர் மன்றம் , பணத்திற்குப் பதிலாக 'சமூகச் சேவை' போன்ற மாற்று வழிகளையும் பரிசீலிக்கக்கூடும் என்று சட்ட சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.
இழப்பீடு என்பதை வெறும் பணமாக மட்டுமே பார்க்காமல், ஒவ்வொரு வழக்கின் சூழல் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் திறனைப் பொறுத்து விரிவாக மதிப்பிட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இதற்காக பிரிட்டன், அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள சமூகச் சேவை அடிப்படையிலான இழப்பீட்டு முறைகளை மலேசியா ஆராய்ந்து வருகிறது.
குறிப்பாக, பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளில் , சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சிறைக்கு அனுப்ப முடியாது என்பதால், அந்நிறுவனங்கள் இதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும். அதேவேளையில் இத்தகைய குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையான இழப்பீடு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து, இது குறித்து சட்டத்துறை அலுவலகம் விரிவான ஆய்வை மேற்கொண்டு வருவதாக அஸாலினா தெரிவித்தார்.








