வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள 16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, "நெகிரி செம்பிலான் கெக்கால் அரப்பான்" என்ற கருப்பொருளில் பக்காத்தான் ஹராப்பான் தனது தேர்தல் அறிக்கையை நேற்று இரவு வெளியிட்டது.
நெகிரி செம்பிலான் பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், இடைக்கால மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருண் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதன்படி, நிலையான, தூய்மையான மற்றும் மக்கள் நல அரசாங்கத்தை மீண்டும் அமைப்பது, SSR மக்கள் நலத் திட்டத்தை வலுப்படுத்துதல், 30 ஆயிரம் உயர்வருமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் போட்டித்திறன் மிக்க பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
மேலும், அனைவருக்கும் தரமான கல்வி, 20 ஆயிரம் மலிவு விலை வீடுகள் அமைப்பது, நிலப் பிரச்சினைகளுக்கு தீர்வு, இளைஞர்கள், பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு முன்னுரிமை, சுற்றுலா மற்றும் பாரம்பரிய மேம்பாடு, பெல்டா மேம்பாட்டுத் திட்டம், நவீன விவசாயம், உணவுப் பாதுகாப்பு, தரமான சுகாதார சேவைகள் மற்றும் சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட 10 முக்கிய உறுதிமொழிகள் இடம்பெற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பக்காத்தான் ஹராப்பான் துணைத் தலைவர் அந்தோனி லோக், தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, பிகேஆர் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் புசியா சல்லே, அமனா துணைத் தலைவர் டத்தோ டாக்டர் மொஹ்ட் ஹட்டா மொஹ்ட் ராம்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, "நெகிரி செம்பிலான் மாஜு 2045" வளர்ச்சி இலக்கின் கீழ், கோலாலம்பூர், சிலாங்கூர், மலாக்கா ஆகியவற்றை இணைக்கும் புதிய பொருளாதார வளர்ச்சி வழித்தடத்தின் மையமாக நெகிரி செம்பிலானை உருவாக்குவதே இலக்கு என அமினுடின் தெரிவித்துள்ளார்.
மேலும், மலேசியா விஷன் வேலி 2.0, என்.எஸ் செமிக்கண்டக்டர் வேலி மற்றும் நீலாய் மேம்பட்ட போட்டோனிக் செயற்கை நுண்ணறிவு உற்பத்தி நகரம் போன்ற திட்டங்கள் மூலம் மாநிலத்தில் உயர்வருமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், தொழில்துறை வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அடத் பெர்பாதிச் பாரம்பரியமும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வரும் ஜூலை 28-ஆம் தேதி முன்கூட்டியே வாக்குப்பதிவும், ஆகஸ்ட் 1-ஆம் தேதி பொது வாக்குப்பதிவும் நடைபெறவுள்ள நிலையில், "விஷன் நெகிரி செம்பிலான் மாஜு 2045" இலக்கை நனவாக்க மக்களிடம் புதிய ஆணையை வழங்குமாறு அமினுடின் ஹருன் கேட்டுக்கொண்டார்.








