பெட்டாலிங் ஜெயா மற்றும் டாமன்சாரா தொகுதி மக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இன வேறுபாடின்றி மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களும் பள்ளி உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், நிதி ஒதுக்கீடுகள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகவே சமூகத்திற்கும் திட்டங்களுக்கும் கொண்டு சேர்க்கப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
'இளைஞர்களுடன் நாம் அனைவரும்' எனும் நிகழ்ச்சியில் பேசிய அவர், "மக்களுக்குத் திட்டங்கள் சேர வேண்டும் என்பதுதான் முக்கியம். பள்ளிவாசல், ஆலயம், கடைகள், வடிகால் என அனைத்துப் பணிகளும் தொய்வின்றித் தொடரும்" என்றார்.
முன்னதாக, பெட்டாலிங் ஜெயா எம்பி லீ சியான் சுங் மற்றும் சுபாங் எம்பி ஒங் சென் ஆகியோர் தங்களின் தொகுதி நிதி ஒதுக்கீட்டுத் தளமான 'மைக்காஸ்' அணுகலை இழந்துள்ளதாகப் புகார் கூறியிருந்தனர்.
நிதி அமைச்சருமான அன்வர் பேசுகையில், சில சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிகளில் இன்னும் பயன்படுத்தப்படாத நிதி எஞ்சியுள்ளதாகக் குறிப்பிட்டார். அதன்படி, சுபாங் தொகுதியில் 1.6 மில்லியன் ரிங்கிட்டும், பெட்டாலிங் ஜெயா தொகுதியில் 3 மில்லியன் ரிங்கிட்டும் இன்னும் பாக்கி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.








