அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இன்று அறிவிக்கப்பட்ட இடைக்கால போர்நிறுத்தத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார்.
இது உலக அமைதியை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முக்கியமான முன்னேற்றமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த போர்நிறுத்தம் இரு வாரங்களுக்கு அமல்படுத்தப்படவுள்ளதாகவும், பாகிஸ்தானின் நடுநிலை முயற்சியுடன் வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே கடைசி நேரத்தில் ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த பேச்சுவார்த்தைகள், நீடித்த அமைதிக்கான தீர்வாக மாற வேண்டும் என்றும், பாலஸ்தீனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் “இனப்படுகொலை”க்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
அதே வேளையில், ஈரான் முன்வைத்த பத்து அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டமானது, அமெரிக்காவால் சாதகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்னேற்றங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை குறைத்து, நிலையான அமைதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்மொழிவு, சம்பந்தப்பட்ட பிராந்தியத்திற்கு மட்டுமல்லாமல் உலகின் மற்ற பகுதிகளுக்கும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க உதவும் ஒரு நல்ல அறிகுறியாகும் என்றும் அன்வார் விவரித்துள்ளார்.
இந்நிலையில், நிலையான அமைதி தொடர்ந்து நிலவ வேண்டுமெனில், அப்பேச்சுவார்த்தைகள் தற்போதைய மோதலைத் தாண்டி விரிவடைய வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.








