கோலாலம்பூர், மே.27-
அடுத்த பொதுத் தேர்தலில், முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லிக்கு எதிராக பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்குமாறு கட்சித் தலைமை முடிவு செய்தால், அதற்குத் தாம் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த அரசியல் ஆலோசகரான தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
என்றாலும், கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது என்றும், வாய்ப்பு வழங்கப்பட்டால் எந்தத் தொகுதியிலும் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் நிதியமைச்சருமான அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், தற்போது காலியாக உள்ள பண்டான் நாடாளுமன்ற தொகுதியில் தாம் அதிக கவனம் செலுத்துவதன் காரணம் அத்தொகுதி மக்களுக்குத் தொடர்ந்து சேவை வழங்குவதற்காக மட்டுமே என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், அடுத்த பொதுத் தேர்தலில், போட்டியிடுவது குறித்து தாம் சிந்திக்கவில்லை என்றும் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில், பிகேஆர் கட்சியிலிருந்து விலகியதோடு, பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்த ரஃபிஸி ரம்லி பெர்சாமா கட்சியுடன் தம்மை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், பண்டான் தொகுதியைத் தொடர்ந்து பிகேஆர் வசம் வைத்திருக்கும்படி தொகுதித் தலைவர்களுக்கு உத்தவிட்டுள்ள அன்வார், இப்போதே அதற்கான பணிகளை திறம்பட மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








