கோத்தா பாரு, மே.27-
கிளந்தான் மாநில பிகேஆர் கட்சியானது, அக்கட்சியின் தேசியத் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கே தங்களின் முழுமையான ஆதரவை வழங்கப் போவதாகவும், பார்டி பெர்சாமா மலேசியா கட்சியில் இணையும் எண்ணம் இல்லை என்றும் உறுதியளித்துள்ளது.
இது குறித்து கிளந்தான் மாநில பிகேஆர் செயலாளர் ரஹிம் ஹசான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் 14 தொகுதித் தலைவர்களும், அவர்களது குழு உறுப்பினர்களும் பிகேஆருக்கு விசுவாசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிகேஆர் தலைவர்களான டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகிய இருவரும், அண்மையில் பெர்சாமா கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தாலும் கூட, கிளந்தான் மாநில பிகேஆர் தலைவர்களைப் பொறுத்த வரையில் அவர்களுடன் இணையும் எண்ணம் இல்லை எனத் திட்டவட்டமாக ரஹிம் ஹசான் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், அடுத்த பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து நிலைகளிலும் கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதில் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளந்தான் மாநிலத்தில் முக்கியத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களில் பலர் பதவி விலகி, பெர்சாமா கட்சியில் இணைந்து வரும் சூழ்நிலையில், ரஹிம் ஹசான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.








