கோலாலம்பூர், மே.27-
பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் தலைமையில், அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்று அறிவிக்கப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோலாலம்பூரில் நடைபெறவுள்ள இதற்கான தொடக்க விழா ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முக்கியப் பிரமுகர் ஒருவர் கூறுகையில், பெர்சத்து கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் பலரும் ஹம்ஸாவுடன் இணையவுள்ளதாகத் தெரிவித்தார். ஜூன் 22 நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, 'ரீசெட் மாநாட்டில்' இப்புதிய கட்சி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








