மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதில் மாமன்னர் முக்கியப் பங்காற்றுகிறார் என்று இன்றைய வெள்ளிக்கிழமை தொழுகை நிகழ்வின் போது வலியுறுத்தப்பட்டது
தேசியப் பள்ளிவாசலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த உரையில், தலைவர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு மக்கள் உரிய மரியாதையை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
சமூக ஊடகங்களில் கருத்துச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அவதூறுகளையும் பொய்களையும் பரப்புவது நாட்டின் ஒற்றுமையை அழிக்கும் என எச்சரிக்கப்பட்டது. நம்பகமான தலைவர்களும் பொறுப்புள்ள குடிமக்களும் இணைந்து செயல்படும்போதே தேசம் வளர்ச்சியடையும் என்றும், உள்நாட்டுப் பூசல்களும் அடையாளத்தை மதிக்காததுமே ஒரு நாட்டின் அழிவுக்குக் காரணமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மாமன்னருக்கு மக்கள் தங்கள் ஆதரவையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற அழைப்புடன் இந்த உரை நிறைவுற்றது.








