பெட்டாலிங் ஜெயா, மே.17-
பிகேஆர் தலைவர்களான டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகிய இருவரும் இன்று Parti Bersama Malaysia கட்சியில் இணையத் தீர்மானித்ததைத் தொடர்ந்து, கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் விளைவுகளைத் தவிர்ப்பதற்காக தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஃபிஸி, தாங்கள் பதவியைக் காலி செய்வதன் மூலம் இடைத்தேர்தல் அவசியமா? என்பதை நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல் தீர்மானிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களது தொகுதிகளைக் காலி செய்வதன் மூலம் கட்சி தாவல் சட்டப் பிரச்சினைகள் ஏற்படாது என்று தாங்கள் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள ரஃபிஸி, வாக்களித்த மக்களிடமே மீண்டும் அதனைத் திரும்ப ஒப்படைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த பொதுத் தேர்தலில், ரஃபிஸி ரம்லி பாண்டான் தொகுதியிலும், நிக் நஸ்மி நிக் அஹ்மாட், செத்தியாவங்சா தொகுதியிலும் தங்களது புதிய கட்சியான Parti Bersama Malaysia சார்பில் மீண்டும் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.








