கோலாலம்பூர், பிப்ரவரி.23-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாஸ் கட்சி ஏற்றுக் கொள்வதற்கு அதன் உச்சமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தனது பதவி குறித்துப் பதிலளிக்க ஹம்ஸா ஸைனுடின் இன்னும் தயாராகவில்லை.
ஒரு வார கால இடைவேளைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கிய 15-வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரின் போது செய்தியாளர்களைச் சந்தித்த லாரூட் நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்ஸா ஸைனுடின், இது குறித்துக் கேட்ட போது "பிறகு சொல்கிறேன்" என்று மட்டும் கூறிச் சென்றார்.
பெர்சத்து கட்சித் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் மற்றும் ஹம்ஸா ஸைனுடின் இடையிலான தலைமைத்துவ மோதலின் உச்சகட்டமாக, கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி ஹம்ஸா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.








