சமூக செயற்பாட்டாளர் அருண் துரைசாமி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் வேளையில், சட்ட சீர்திருத்தங்களுக்கான துணை அமைச்சர் எம். குலசேகரன் அங்கிருந்தததாகக் கூறப்படுவது, சட்ட அமைப்பின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கியிருப்பதாக ஜசெக கட்சியைச் சேர்ந்த 4 தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
ஜசெக மத்திய செயற்குழு உறுப்பினர்களான ஷேக் உமர் பகாரிப் அலி, யாங் ஷெபூரா ஓத்மான்,ஷாரெட்ஸான் ஜோஹான், மற்றும் புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் சரீனா அப்துல் ரஷீத் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்றத்தில் அருண் துரைசாமி-ஐ குலசேகரன் சந்தித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
சட்ட சீர்திருத்த பொறுப்பில் உள்ள குலசேகரனின் இந்த செயலானது பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்களையும், குறிப்பாக சட்ட அமைப்பின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அருண் துரைசாமிக்கு ஆதரவாக எடுக்கப்படும் எந்த ஒரு தனிப்பட்ட நடவடிக்கையும் ஜசெக கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதனிடையே, இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள குலசேகரன், நீதிமன்றத்திற்கு வெளியே சில நிமிடங்கள் மட்டுமே அருண் துரைசாமி-ஐ சந்தித்து சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.








