பெட்டாலிங் ஜெயா, மே 28-
விரைவில் நடைபெறவிருக்கும் பினாங்கு, சுங்கை பக்கப் சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் சார்பில் அம்னோ போட்டியிடுவதற்கு பக்காத்தான் ஹராப்பான் வழிவிட வேண்டும் என்று கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் விரும்புவதாக பினாங்கு அம்னோ தலைவர் கூறுகிறார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் பிரதமராக வருவதற்கு ஆதரவு தெரிவித்தது உட்பட ஒற்றுமை அரசாங்கம் நிறுவப்படுவதற்கு அம்னோ ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சுங்கை பக்கப் இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தனது வேட்பாளரை நிறுத்துவதற்கு பக்காத்தான் ஹராப்பான் வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்கள் விரும்புவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அம்னோ தலைவர் ஒருவர் FMT- யிடம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் DAP-யை சேர்ந்த பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சாக் தாவோ வெற்றிபெறுவதற்கு அம்னோ உதவியதற்கு ஈடாக சுங்கை பக்கப் இடைத் தேர்தலில் அம்னோவிற்கு பக்காத்தான் ஹராப்பான் வழிவிட வேண்டும் என்று அந்த தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.








