மலேசிய சீனர் மற்றும் இந்தியர்களின் விசுவாசத்தைக் கேள்வி எழுப்பும் வகையில் பேசிய பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குனர் சனுசி நோர் மீது அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் சொங் ஜெமின் வலியுறுத்தியுள்ளார்.
நெகிரி செம்பிலான், ஜெம்போலில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் பேசிய சனுசி "மலேசிய சீனர் மற்றும் இந்தியர்களுக்கு வேறு நாடுகள் உள்ளன; ஆனால் மலாய்க்காரர்களுக்கு 'தனா மலாயு' மட்டுமே உள்ளது" என்று குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்துப் பேசிய கம்பார் எம்.பி.யான சொங் ஜெமின், இங்கேயே பிறந்து, வளர்ந்து, நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்த மில்லியன் கணக்கான சீனர் மற்றும் இந்திய வம்சாவளியினரை சனுசி-இன் பேச்சு அவமதிக்கும் வகையில் உள்ளது என்றார்.
தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக அவர் இனவாதத்தை ஒரு உத்தியாகப் பயன்படுத்துவதாகவும், இது சமூகங்களிடையே பகைமையை வளர்த்து நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறும் என்றும் எச்சரித்தார்.
"எங்கள் முன்னோர்கள் இந்த நாட்டை உருவாக்க உதவினார்கள். தலைமுறை தலைமுறையாக நாங்கள் வரி செலுத்தி, சமூகத்திற்குச் சேவை செய்து, மலேசியாவின் நலன்களைப் பாதுகாத்து வருகிறோம். வெறும் இனம் மற்றும் தோலின் நிறத்தை வைத்து எங்கள் விசுவாசத்தைக் கேள்வி எழுப்ப எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் உரிமை இல்லை" என்று அவர் சாடினார்.
அதே வேளையில், இந்த விவகாரத்தில் மசீச மற்றும் மஇகா தலைவர்கள் தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், சனுசி தனது கருத்தைத் திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சொங் ஜெமின் கேட்டுக்கொண்டார்.








