மலேசிய கடல் எல்லையில் அமெரிக்க கடற்படை போர் கப்பல்கள் காணப்பட்டது குறித்து அரசாங்கம் விரிவான விளக்கமளிக்க வேண்டும் என்று பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, வடக்கு பட்டர்வொர்த் கொள்கலன் முனையத்தில், அமெரிக்காவின் இரண்டு கடலோரப் போர் கப்பல்கள் நங்கூரமிட்டிருந்ததாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
இக்கப்பல்கள் வெடிகுண்டு அகற்றும் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டவை என்றும், முன்னதாக மத்திய கிழக்கில் பணியில் ஈடுபட்டிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின், அக்கப்பல்கள் மலேசிய விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டதாக விளக்கம் அளித்திருந்தார்.
இருப்பினும், இது போன்ற அறிக்கைகள், மத்திய கிழக்கு போரில் மலேசியா கடைப்பிடித்து வரும் நடுநிலைக் கொள்கைக்கு முரணாக இருக்குமா? என்ற கவலை எழுந்துள்ளதாக பெரிக்காத்தான் பொதுச்செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
போரில் மலேசியா எவ்விதப் பங்கும் வகிக்காது எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட அறிவிப்பை பெரிக்காத்தான் வரவேற்றபோதிலும், மலேசியக் கடல் எல்லைக்குள் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த கப்பல்களின் இருப்பு, போரில் மலேசியாவிற்கு மறைமுக பங்களிப்பு உள்ளதா என்ற கேள்விகளை எழுப்புவதாகவும் தக்கியுடின் குறிப்பிட்டுள்ளார்.








