Aug 26, 2026
Thisaigal NewsYouTube
மனவளர்ச்சிக்குன்றிய சிறார்களின் மையத்தின் பிரச்னைக்கு தீர்வு கண்டார் பாப்பாராய்டு
அரசியல்

மனவளர்ச்சிக்குன்றிய சிறார்களின் மையத்தின் பிரச்னைக்கு தீர்வு கண்டார் பாப்பாராய்டு

Share:

பந்திங், நவ. 15-


சிலாங்கூர், பந்திங்கில் செயல்பட்டு வரும் சிலாங்கூர் மனவளர்ச்சிக் குன்றிய சிறார்கள் பராமரிப்பு மையத்தில் நீடித்து வந்த பிரச்னைக்கு வீ. பாப்பாராய்டு தலையிட்டது மூலம் நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது.

மன வளர்ச்சிக்குன்றிய 94 சிறார்களை பராமரித்து வரும் அந்த மையத்தில் அதிகரித்து வரும் குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணத்தை சமாளிக்க முடியாமல், கட்டணப்பாக்கி நிலுவையில் இருக்கும் பட்சத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டுவிற்கு அந்த பராமரிப்பு மையத்தின் தலைவர், கடிதம் எழுதி, தாங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை விவரித்து இருந்தார்.

ஒவ்வொரு மாதமும் சிறார்களின் பராமரிப்பு செலவினத்திற்கு மத்தியில் குடிநீர் மற்றும் மின்சாரக் கட்டணத்தை செலுத்த இயலாமல் கட்டணப் பாக்கி, இரண்டு மாதங்கள் நிலுவையில் இருப்பதையும், பாப்பா ராய்டுவின் மேலான கவனத்திற்கு அவர் கொண்டு வந்தார்.

மிகுந்த கவன ஈர்ப்பாக அமைந்த சிறார் நலன் சார்ந்த இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்ட பாப்பா ராய்டு, கோல லங்காட் மாவட்ட தெனாகா நேஷனல் பெர்ஹாட் மற்றும் சிலாங்கூர் குடிநீர் நிர்வாக வாரியமான Air Selangor-ரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக, அந்த மன வளர்ச்சி குன்றிய சிறார்களின் மையத்தின் மாதாந்திர குடிநீர் விநியோகக் கட்டணத்தையும், மின்சாரக்கட்டணத்தையும் குறைப்பதற்கு ஆயர் சிலாங்கூரும், தெனாகா நேஷனலும் இணக்கம் தெரிவித்தன. அத்துடன் அதற்கான உத்தரவாத கடிதத்தையும் வழங்கின.

தனது சட்டமன்றத் தொகுதியில் செல்படும் கடப்பாடு மிகுந்த அந்த சிறார் மையத்தின் செயல்பாட்டை நேரடியாக கண்டறியவும், தார்மீக ஆதரவு நல்கவும் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு நேற்று நேரடி வருகை புரிந்தார்.

மாவட்ட மன்ற உறுப்பினர், இந்திய கிராமத் தலைவர், கம்பத்து தலைவர், ஆட்சிக்குழு உறுப்பினர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பந்திங் சட்டமன்ற உறுப்பினர் சேவை மைய அதிகாரிகள் ஆகியோருடன் வருகை தந்து அந்த சிறார் மையத்தின் செயல்பாட்டை பாப்பாராய்டு நேரடியாக பார்வையிட்டார்.

அந்த சிறார் மையம் சீரான செயல்பாட்டைக் கெண்டிருப்தற்கு 94 சிறார்களை சமாளிக்க வல்ல, 400 கேலன் கொள்ளளவை கொண்ட இரண்டு கொள்கலன்களையும் அன்பளிப்பாக வழங்குவதற்கு பந்திங் சட்டமன்ற உறுப்பினரான பாப்பாராய்டு உறுதி அளித்தார்.

ஆட்சிக்குழு உறுப்பினரின் இந்த துரித நடவடிக்கை தம்மை வியப்படைய செய்ததாக குறிப்பிட்ட அந்த மையத்தின் செயலாளர் ஆயிஷா, தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

Related News