கோலாலம்பூர், ஜூலை.16-
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் தங்கு தடையின்றித் தொடர, நடைபெறவுள்ள 16-ஆவது மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அனைவரும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்குத் தங்களின் பேராதரவை வழங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்துத் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பக்காத்தான் ஹராப்பானின் தேசியத் தலைவருமான பிரதமர் அன்வார், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பால் மட்டுமே பல நற்பணிகளைச் சாதிக்க முடிந்தது என்றும், இன்னும் பல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2018 முதல் நெகிரி செம்பிலான் மாநிலத்தை நிர்வகித்து வரும் இடைக்கால மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் , நேர்மையோடும் மிகுந்த பொறுப்புணர்வோடும் மாநிலத்தை வழிநடத்தியுள்ளார் என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.
நாம் இணைந்து உருவாக்கிய இந்த வளர்ச்சிப் பாதையை பாதியில் நிறுத்தி விடாமல், தூய்மையான மற்றும் நிலையான ஆட்சியைத் தொடர பக்காத்தான் ஹராப்பானுக்கு மீண்டும் மக்கள் பலம் சேர்க்க வேண்டும் என்று அன்வார் கேட்டுக் கொண்டார்.








