வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில், டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை மாநில மக்கள் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என்று பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகரும், முன்னாள் முதலீடு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சருமான தெங்கு டத்தோஸ்ரீ சஃபுருல் தெங்கு அப்துல் அஜிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நெகிரி செம்பிலான் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான கூட்டணி அரசு மிகத் திறம்பட வழிநடத்தி வருவதாக நெகிரி செம்பிலான், பிடிஎம் ஆயர் குனிங்கில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெங்கு சாஃபுருல் சுட்டிக்காட்டினார்.
மாநில மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதிலும் , மாநிலத்தை முன்னெடுக்கும் தூர நோக்குத் திட்டத்திலும் திறம்பட நிரூபித்து இருக்கும் லிங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பானுக்கு தலைமையேற்று இருக்கும் டத்தோஸ்ரீ அமினுடினும், / இதர பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மாநில மக்களை தெங்கு ஜப்ருல் கேட்டுக்கொண்டார்.
டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூனின் சிறந்த நிர்வாகத்தின் மூலம் மட்டுமே மாநிலத்தில் நிலையான பொருளாதார உயர்வை ஏற்படுத்தி, மக்கள் அனைவரும் ஒரு சுபிட்சமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்றும் தெங்கு சாஃபுருல் வலியுறுத்தினார்.








