நவ. 24-
தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ அரி அகமாட் ஸாஹிட் ஹமிடி, பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசை விட்டு வெளியேறி புதிய அரசை உருவாக்க, தனது கூட்டணியை சிலர் வற்புறுத்தியதாக வெளிப்படுத்தினார்.
இந்த முன்மொழிவை ஏற்றால், தனது கூட்டணியினருக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்றும் அவர்கள் கூறியதாக ஸாஹிட் குற்றம் சாட்டினார். எவ்வாறாயினும், தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருவதால், அந்த இரண்டகச் செயலுக்கு உடன்பட தமக்கு மனம் ஒப்பவில்லை என்ற காரணத்தால் அவர் இந்தப் பரிந்துரையை நிராகரித்ததாக அவர் கூறினார்.
"அரசியலில், மற்றவர்களின் தலையில் பாதத்தை வைக்காதீர்கள். நாம் மற்றவர்களின் தலையில் பாதத்தை வைத்தால், ஒரு நாள் மற்றவர்கள் நம் தலையில் பாதத்தை வைப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்." என்றார் சாஹிட்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் இருந்த தற்போதைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், புதிய ஒற்றுமை அரசை உருவாக்கி தம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், அதற்காக நான்கு அமைச்சர்களை வழங்க வேண்டும் என்றும் தம்மிடம் வந்ததாக ஸாஹிட் கூறீனார். .
"கடந்த வாரம், அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னை சந்தித்தார். ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் புதிய ஆட்சியை இணைந்து உருவாக்குவோம். நாங்கள் மீண்டும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க விரும்புகிறோம், எங்களுக்கு நான்கு அமைச்சர்களை வழங்குங்கள் என்று அவர்கள் கூறினர்.
அவரது கூற்றுப்படி, எதிர்க்கட்சி தற்போது மிகவும் பலவீனமாக இருப்பதையும், மீண்டும் அரசைப் பிடிக்க எதையும் செய்ய தயாராக இருப்பதையும் இந்த செயல் காட்டுகிறது எனவும் ஸாஹிட் குறிப்பிட்டார்.








