சென்னா சட்டமன்றத் தொகுதி பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பாதுகாப்பான கோட்டையாகக் கருதப்பட்டாலும், இம்முறை அங்கு நிலவும் கட்டமைப்பு மாற்றங்களால் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தொகுதியில் கடந்த 2013 முதல் அந்தோனி லோக் வெற்றி பெற்று வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் அவர் 2,200 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.
இம்முறை தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் தரப்பு சென்னா தொகுதியில் போட்டியிடவில்லை. இதனால், கடந்த முறை பெரிக்காத்தான் நேசனல் பெற்ற 3,688 வாக்குகள் எந்தப் பக்கம் செல்லும் என்பது தற்போது மிகப்பெரிய கேள்வியாகியுள்ளது. அந்தத் தொகுதியில் மலாய் சமய வாக்காளர்கள் சுமார் 46.3 சதவீதமும், சீன வாக்காளர்கள் சுமார் 44.4 சதவீதமும் உள்ளனர். எந்தவொரு சமூகத்திற்கும் தனித்து முழுமையான பெரும்பான்மை இல்லாததால், அனைத்துத் தரப்பு வாக்குகளையும் ஈர்ப்பதே வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
இந்தத் தேர்தல் முடிவுகள், பாரிசான் நேசனல் மற்றும் பாக்காத்தான் ஹராப்பான் இடையேயான அரசியல் புரிந்துணர்வு அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கான சிறந்த சோதனையாக அமையும். மத்திய அமைச்சரான அந்தோனி லோக்கின் செல்வாக்கும், முழுநேர மக்கள் பிரதிநிதியாக வலம் வரத் துடிக்கும் எம்.சி.ஏ வேட்பாளர் சியோ கோங் கூன் ஆகியோரின் பிரச்சாரங்களும் இப்போட்டியை மேலும் தீவிரமாக்கியுள்ளன.








