நிபோங் திபால், நவ. 16-
இம்மாதம் முற்பகுதியில் தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சின் பேராளர் குழுவிற்கு, உபசரணை இல்லமாக கல்வி அமைச்சு செயல்பட்டதை கல்வி அ மைச்சர் பாட்லினா சீடேக் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் பேராளர் குழுவின் வருகை நிறைவு பெற்று விட்டது. கல்வி முறை குறித்து அறிந்து கொள்வதற்காக கல்வி அமைச்சுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காக அவர்கள் மலேசியா வந்தனர் என்று பாட்லினா சீடேக் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தான் பேராளர் குழுவினர் மலேசியாவில் இருந்த போது கல்வி முறை குறித்து தொடர் பேச்சுவார்த்தைகளிலும் அவர்கள் பங்கு கொண்டனர் என்று தமது நாடாளுமன்றத் தொகுதியான நிபோங் திபாலில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் ஆப்கானிஸ்தான் பேராளர் குழு வருகையை பாட்லினா சீடேக் உறுதிப்படுத்தினார்.
கல்வித்துறையில் ஆப்கானிஸ்தானுக்கு மலேசியா உதவுமா? என்று கேட்ட போது, இது குறித்து பின்னர் விவாதிக்கப்படும் என்று பாட்லினா சீடேக் தெரிவித்தார்.
ஆப்பானிஸ்தான் கல்வி தலைமை இயக்குநர் ஷஹாபுடின் சாஹிப் தலைமையில் அந்நாட்டின் கல்வி பேராளர் குழுவினர் மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டு திரும்பியுள்ளனர் என்று ஆப்கானிஸ்தான் வானொலி தொலைக்காட்சி அண்மையில் அறிவித்து இருந்தது. நவம்பர் 4 ஆம் தேதி மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டு அவர்கள் ஒரு வார காலம் மலேசியாவில் உள்ள பள்ளிகள் மற்றும் உயர்க்கல்விக்கூடங்களுக்கு வருகை புரிந்ததாக அது குறிப்பிட்டு இருந்தது.
தலிபான் தலைமையிலான ஆப்பானிஸ்தான் அரசாங்கத்துடன் உறவை சீர்படுத்திக்கொள்வதற்கும், ஒத்துழைப்பு கொள்வதற்கும் மலேசியா தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








