கங்கார், டிசம்பர்.26-
பெர்லிஸ் மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு இடைத்தேர்தல்களைச் சந்திக்கத் தயார் என்று பாஸ் கட்சி பகிரங்கமாக இன்று அறிவித்துள்ளது.
பெர்லிஸ் மந்திரி பெசார் முகமட் ஷுக்ரி ரம்லிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது, அவர் ராஜினாமா செய்யும் அளவிற்கு நெருக்குதல் கொடுத்த எட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையைப் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கண்டித்தார்.
பெர்சாத்து கட்சியின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த கைங்கரியத்தைப் புரிந்துள்ளனர்.
பெர்சாத்து கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு துணைப் போன பாஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர் என்று அப்துல் ஹாடி சுட்டிக் காட்டினார்.
இதனால் ஏற்படக்கூடிய இடைத்தேர்தல்களை எதிர்நோக்குவதற்கு பாஸ் கட்சி தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.








