விசா காலம் நிறைவடைந்த பின்னும் நாட்டை விட்டு வெளியேறாத சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென சுற்றுலா, கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவிற்குள் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும், வெளியேறும் பயணிகளின் எண்ணிக்கையும் சமநிலையில் இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சமநிலைப் பிரச்சினையானது பலமுறை முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட தியோங் கிங் சிங், சுற்றுலா முகவர்கள் மூலமாக மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலிருந்து தனிப்பட்ட முறையிலும் பயணிகள் மலேசியாவிற்கு வருவதாகத் தெரிவித்தார்.
அவர்களில் அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் மீது, குடிநுழைவுத் துறை கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நேற்று தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.








