பினாங்கில் உள்ள வடக்கு பட்டர்வர்த் கொள்கலன் முனையமான NBCT துறைமுகத்தில் இரண்டு அமெரிக்க கடற்படை கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தது வழக்கமான போக்குவரத்துத் தேவைகளுக்காக மட்டுமே என தற்காப்பு அமைச்சர் முகமது காலிட் நோர்டின் விளக்கமளித்துள்ளார்.
யுஎஸ்எஸ் சாண்டா பார்பரா (LCS 32) மற்றும் யுஎஸ்எஸ் துல்சா (LCS 16) ஆகிய இரு கப்பல்கள் கடந்த மார்ச் 14 முதல் 16-ஆம் தேதி வரை NBCT துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்ததாகக் கூறினார்.
வெளிநாட்டு கடற்படை கப்பல்கள் மலேசிய துறைமுகங்களுக்கு வருவது புதிதல்ல என்று குறிப்பிட்ட காலிட் நோர்டின், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சர்வதேச கடல் நடைமுறைகளும், பாதுகாப்பு உறவுகளின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்தார்.
மேலும், இத்தகைய துறைமுக வருகைகள் பாதுகாப்பு துறையில் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் செயல்படும் ‘பாதுகாப்பு ராஜதந்திரம் முயற்சியாகும் என்றும் அவர் விவரித்துள்ளார்.
அதே வேளையில், நாட்டின் இறையாண்மை மற்றும் எல்லைப் பாதுகாப்பும் கட்டாயமாகப் பேணப்படும் என்றும் காலிட் நோர்டின் உறுதியளித்துள்ளார்.
மேலும், துறைமுக வருகையின் முக்கிய நோக்கமானது, கப்பல்களுக்குத் தேவையான எரிபொருள் நிரப்புதல், சிறிய பராமரிப்பு பணிகள் மற்றும் கப்பற்படையினருக்கு ஓய்வு வழங்குதல் போன்றவை அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்க கடற்படை போர் கப்பல்களின் வருகை குறித்து, அரசாங்கம் விரிவான விளக்கமளிக்க வேண்டும் என்று பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.








