சென்னை, மார்ச் 03 – தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களுக்குத் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள். நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!"
அரசியல் களத்தில் தடம் பதித்துள்ள விஜய், கடந்த காலங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர் தெரிவித்துள்ள இந்த வாழ்த்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி, தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தமிழகக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








