சிரம்பான், ஆகஸ்ட்.01-
தேர்தல் நாளில் புதிய வாக்காளர் சரிபார்ப்பு முறையை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு நெகிரி செம்பிலான் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், வேட்பாளருமான அமினுடின் ஹரூன், எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
லிங்கி தொகுதியில் போட்டியிடும் அவர், இந்த புதிய முறை குறித்து வேட்பாளர்களுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்றும், இது வாக்களிப்பு நடைமுறையை தாமதப்படுத்தி, வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்று இன்று காலை Raja Melewar ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் தமது வாக்கை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அம்பாங்கானில் உள்ள Sekolah Menengah Agama Dato' Klana Petra Maamor வாக்குச் சாவடியில் மட்டும் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள OCR-VA தொழில்நுட்பம், வாக்காளர்களின் MyKad தகவல்களை தானாகவே ஸ்கேன் செய்து வருகையைப் பதிவு செய்கிறது. இது கைமுறையிலான பதிவு முறைக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.
இதனையடுத்து, இந்த சோதனைத் திட்டம் குறித்து வேட்பாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாதது ஏன் என அம்பாங்கான் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் நஸ்ரி காசிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், இந்த புதிய முறை, வாக்காளர்களின் விவரங்களை உறுதிப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தும் என்றும், வாக்கு ரகசியத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.








