நெகிரி செம்பிலான் அரண்மனை தனக்கு வழங்கிய இரு மிக உயரிய ‘டத்தோஸ்ரீ’ மற்றும் ‘டத்தோ’ பட்டங்களை உடனடியாக மீட்டுக் கொள்வதாக அறிவித்த முடிவை முன்னாள் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ ராயிஸ் யாத்திம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
"காலங்கள் மாறும்; விருதுகள் வழங்கப்படும், சில சமயங்களில் அவை திரும்பப் பெறப்படும், இதை நான் இயல்பாகவே எடுத்துக் கொள்கிறேன்" என்று அவர் வீடியோ பதிவொன்றில் தெரிவித்துள்ளார். அரண்மனையின் கம்பீரத்தையும் கௌரவத்தையும் காக்கும் பொருட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநிலச் செயலாளர் டத்தோ முகமட் ஜாஃபிர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், க்ளவாங்க் தொகுதியில் ராயிஸ் யாத்திமின் மகன் டானி, பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
ராயிஸ் யாத்திமிற்கு மத்திய அரசாங்கம் வழங்கிய 'டான்ஸ்ரீ' பட்டம் அவரிடம் தொடர்ந்து நீடிக்கிறது.








